கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செயல்பட்டு வரும் மகாலெஷ்மி பெண்கள் மற்றும் மகப்பேறு மையத்தில், 37 வயதுடைய பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த 5.1 கிலோ எடையுள்ள மிகப்பெரிய கருப்பை நார்க்கட்டி (Fibroid Uterus) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
அந்த பெண் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலி, உடல் அசௌகரியம் மற்றும் அதிக உடல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மகாலெஷ்மி பெண்கள் மற்றும் மகப்பேறு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், 24X16X22 செ.மீ அளவிலான மிகப்பெரிய கருப்பை நார்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மகப்பேறு மற்றும் மகளிர் நோய் நிபுணர் டாக்டர் ஜே. எழிலரசி கார்த்திகேயன் தலைமையில் மருத்துவக் குழுவினர் அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் வினோத் குமார், பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிபிரசாத் உள்ளிட்ட மருத்துவர்கள் இணைந்து பல மணி நேரம் நடைபெற்ற சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் 5.1 கிலோ எடையுள்ள கருப்பை கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளி நலமாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அதிக வயிற்று வலி, மாதவிடாய் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளை அலட்சியம் செய்யாமல் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியம். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் இதுபோன்ற பாதிப்புகளை எளிதாக குணப்படுத்த முடியும்” என அறிவுறுத்தினர்.
உளுந்தூர்பேட்டையில் செயல்பட்டு வரும் மகாலெஷ்மி பெண்கள் மற்றும் மகப்பேறு மையம், பெண்களுக்கான நவீன மருத்துவ வசதிகளுடன் சிறந்த சிகிச்சை சேவைகளை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.


No comments:
Post a Comment